சென்னை: பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த நிபந்தனை குறைப்பு தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க குறைந்த ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அரசு இந்த உத்தரவை வெளியிடவுள்ளது என்றும் பள்ளி்க் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒவ்வோர் ஆண்டும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்குக்காக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது.
இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையும் அதில் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் இதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களையும் அவை அறிவித்துள்ளன. ஆசிரியர்கள் இதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளதால் கவுன்சிலிங்குக்காக நிபந்தனையைக் குறைக்க அரசு முன்வந்துள்ளதாக்த தெரிகிறது.
இதுதொடர்பாக கவுன்சிலிங்கி பங்கேற்பதற்கான நிபந்தனையை குறைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிபந்தனைக் காலம் குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.