தமிழக அரசு தரும் இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதையடுத்து ஏராளமான மாணவர்கள் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியை மாணவர்கள் தொடர்புகொண்டு அறியலாம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) தொடக்கநிலை வகுப்புகளில் (எல்கேஜி மற்றும் முதல் வகுப்பு) ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்கள் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் சேரும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு மாநில அரசுகளே செலுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏழை மாணவ, மாணவிகள் எந்தவித கட்டணமும் இன்றி தனியார் பள்ளிகளில் படிக்க முடியும்.

இதனிடையே, வரும் கல்வி ஆண்டில் (2024-2025) 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் மாணவச் செல்வங்கள் சேர்வதற்கான ஆன்லைன் (https://rte.tnschools.gov.in) விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22 முதல் மே 20 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்திருந்தது.
எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு, குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2021 ஜூலை 31-ம் தேதிக்குள்ளும், முதல் வகுப்பில் சேர விரும்பும் குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1 முதல், 2019 ஜூலை 31-ம் தேதிக்குள்ளும் பிறந்திருத்தல் அவசியம் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, 25 சதவீத இடங்களில் ஏழை மாணவ, மாணவிகள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள மையம் ஆகிய இடங்களிலும் பெற்றோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக்கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க முடியும்.
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் மே 20-ம் தேதி வரை இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் மே 28-ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் நேற்று அனுப்பத் தொடங்கினர்.


Click it and Unblock the Notifications












