நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளிலிருந்து இடைநிற்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், அந்த இடங்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பிவிட்டன.
இதனிடையே, கலந்தாய்வில் இடங்களைப் பெற்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் விட்டு விலகுவதாக இருந்தால் அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அதனைத் தொடர விரும்பாவிட்டால் சனிக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 3) கல்லூரியிலிருந்து விலகி அந்த இடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
இதற்கு அடுத்ததாக ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் (ஆகஸ்ட் 4, 5) கல்லூரியை விட்டு விலகும் பட்சத்தில் கலந்தாய்வின்போது அளிக்கப்பட்ட உறுதிச் சான்றின்படி ரூ.1 லட்சம் அபராதமாகச் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 6-ஆம் தேதி அல்லது அதன் பிறகு கல்லூரிகளிலிருந்து விலகுபவர்கள் ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று, பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்தவர்கள் படிப்பைத் தொடர விரும்பாவிட்டால், ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஆக. 4) தங்களது இடங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஆகஸ்ட் 5 அல்லது 6-ஆம் தேதிகளில் படிப்பைக் கைவிடுவதாக இருந்தால் ரூ.1 லட்சமும், அதன் பிறகு கல்லூரிகளை விட்டு நிற்கும் பட்சத்தில் ரூ.10 லட்சமும் அபராதமாகச் செலுத்த நேரிடும்.