சென்னை: தமிழகத்தில் 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடுத்து அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய மத்திய இடைநிலைக் கல்வி திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 385 கல்வி வட்டாரங்கள் உள்ளன. இவற்றில் கல்வித் தரம் எப்படி உள்ளது என்று சமீபத்தில் தகவல் சேகரிக்கபப்ட்டது. அதன்படி பெண் கல்வியில் தேசிய சராசரிக்கும் குறைவாக கல்வி உள்ளதாக 44 வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 14 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன.
இந்த வட்டாரங்கள் பெண் கல்வியில் பின் தங்கியுள்ளதற்கு சமூக, பொருளாதார காரணிகள் என்ன, என்பது குறித்தும் அருகாமை பள்ளிகள் எத்தனை உள்ளன என்பது குறித்தும், மாணவியர் படிப்பதற்கான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய இடைநிலைக் கல்வி திட்ட (ஆர்எம்எஸ்ஏ) அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆய்வுகளை தேசிய கல்வி திட்டமிடல் நிர்வாகப் பல்கலைக் கழகம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கண்ட 44 வட்டாரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது.