சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக இருந்த செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக சமீபத்தில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் பதவிக்கான 23 காலியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக் கொண்ட தேர்வுப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதியவர்கள் இணையதளத்தைப் பார்த்து தங்களது முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.