சென்னை: டெல்லி சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் யு.ஜி.சி. சார்பில், இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு, காரைக்குடி மையத்தில் 9 இடங்களில் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் பணிகளுக்காக தேசிய அளவில் நடத்தப்படும் முக்கியமான தேர்வு இதுவாகும்.
இந்த தேர்வுக்காக இதுவரை மட்டும் 4,100 பேர் பெயர்களைப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். தேர்வில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சான்றை www.csirhrdg.res.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்காக இந்த முறையும் நுழைவுச்சீட்டு சான்று அஞ்சல் வழியாக வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லையெனில், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று ஒன்றும் நுழைவுச் சீட்டுடன் விண்ணப்பதாரர்கள் கொண்டு வரவேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்கள் கருப்பு மை பால்பாயின்ட் பேனா ஒன்றும் கட்டாயம் எடுத்து வரவேண்டும்.
ஜூன் 21 காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, உயிர் அறிவியல், புவி, வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல், கணித அறிவியலுக்கானத் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வேதி அறிவியல், இயற்பியல் அறிவியல் மற்றும் பொறியியல் அறிவியலுக்கானத் தேர்வும் நடைபெறும்.
தேர்வு மையத்தில் நகல் நுழைவுச்சீட்டு வழங்கப்படமாட்டாது. தேர்வு மையத்துக்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக வரவேண்டும் என, காரைக்குடி தேர்வு மைய(செக்ரி) ஒருங்கிணைப்பாளர் எஸ். மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் 04565-241261, 94421-26765 ஆகிய எண்களிலோ அல்லது தொடர்பாளர் என். கருணாநிதியின் 94436-09776 செல்போன் நம்பருக்கோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.