தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் நடிகர் அஜித் தலைமையில் உருவாக்கப்பட்ட தக்ஷா ட்ரோன் பெரும் பங்காற்றி வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அப்பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் நடிகர் அஜித் இணைந்து தயாரித்த ஆளில்லா ட்ரோன் நாடளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் டிரோன் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர். அந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராகச் செயல்பட்டு பல சாதனைகளைத் தேடித்தந்தார். அந்த ட்ரோன் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பரிசுகளை வென்றது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சம் அடைத்துள்ள நிலையில், தல அஜித் ஆலோசகராகச் செயல்பட்ட கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய ஆளில்லா குட்டி விமானம், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
குறிப்பாக, சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.
முன்னதாக, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். சிவப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகளைத் தெளிக்க நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.