சென்னை: குழந்தைத் தொழிலாளியாக்கப்பட்ட மாணவர் இன்று தனது விடா முயற்சியால் மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.
குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு பெற்றோருடன் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்தவரை மீட்டு மீண்டும் படிப்பில் சேர்த்தனர். அவரும் சிறப்பாக பயின்று 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று, இன்று மருத்துவப் படிப்பில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
அவர் கார்த்திக் என்ற சாதனை இளைஞர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடைச் சேர்ந்த மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி. மருத்துவப் படிப்புக் கவுன்சிலிங்கில் நேற்று பங்கேற்ற அவருக்கு சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது.
இவர் குடும்ப வறுமை காரணமாக 2007-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளராக கட்டிடத் தொழிலுக்கு அனுப்பபப்பட்டார். ஆனால் சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் அவர் மீட்கப்பட்டார்.
பின்னர் அவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இப்போது ஆலமரம் போல வளர்ந்து மருத்துவப் படிப்பு வரை உயர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து கார்த்திக் கூறியதாவது: டாக்டர் ஆகவேண்டும் என்ற இலக்குடன் படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1156 மதிப்பெண்கள் பெற்று, குழந்தைத் தொழிலாளர்களிலேயே முதல் மாணவன் என்ற நிலையை எட்டினேன். எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த எனக்கு மருத்துவ கட்-ஆஃப் 194.25 ஆக இருந்தது.
நம்பிக்கை பிறந்தது. அதே நம்பிக்கையுடன் கவுன்சிலிங்குக்கு வந்தேன். இப்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஏழைகளின் கஷ்டம் எனக்குத் தெரியும். டாக்டர் படிப்பு முடித்து ஏழைகளுக்கு நிச்சயம் சேவை செய்வேன் என்கிறார் கார்த்திக்.
மீட்கப்பட்டபோதுதான் அவர் குழந்தைத் தொழிலாளி. இன்று அவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக எழுந்து நிற்கிறார்.