பொதுப் பிரிவினரில் நலிவுற்ற பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் முதல் முறையாக வங்கிப் பணித் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெப்கோ வங்கி நடத்தும் இளநிலை உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் முதல் முறையாக வங்கிப் பணித் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுப் பிரிவினரில் (முற்பட்ட வகுப்பினரில்) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு இதுவரை எந்தப் போட்டித் தேர்வுகளிலும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இப்போது ரெப்கோ வங்கி நடத்தும் தேர்வில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க, அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தாலும் அதன் மீது தமிழக அரசு இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக தற்போது வரை அறிவிக்கவில்லை.
இதனால், மருத்துவ இடங்களில் முற்பட்ட வகுப்பினரில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது.
தற்போது, ரிசர்வ் வங்கியின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரெப்கோ வங்கி, தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் பொதுப் பிரிவினரில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 40 காலிப் பணியிடங்களில் 10 சதவிகிதம், அதாவது நான்கு இடங்களை முற்படுத்தப்பட்ட நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கியுள்ளது.