உதவி பேராசிரியர் பணியில் சேர உதவும் செட் தகுதித் தேர்வுக்கு பட்டதாரிகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.msutnset.com என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
தமிழக மாநிலத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர நெட் அல்லது செட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும். 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் செட் தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு செட் தேர்வுக்கான அறிவிப்பை சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது.

அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம் உட்பட மொத்தம் 43 பாடங்களுக்கான ஸ்லெட் தகுதித்தேர்வு ஜுன் 3-ம் தேதி கணினிவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் (ஏப்ரல் 1) தொடங்குகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் www.msutnset.com என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.2500, பிசி, எம்பிசி, டிஎன்சி வகுப்புக்கு ரூ.2000, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3-ம் பாலினத்தனவர் கட்டணம் செலுத்த வேண்டாம்.
இந்த தேர்வுக்கு முதுநிலை படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது. முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு வயது வரம்பு கிடையாது. தேர்வில் மொத்தம் 2 தாள்கள் உள்ளது.
முதல் தாளில் பொது அறிவு, ஆராய்ச்சித் திறன் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் 50 கேள்விகள் இடம்பெறும். 2-வது தாளில் சார்ந்த பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
இதற்கான பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












