சென்னை: தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 28-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தவுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பு:
நெடுஞ்சாலைத் துறையில், 213 உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது.
இதில் நேர்காணலுக்கு தற்காலிகமாகத் தேர்வு பெற்ற 424 விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்த விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணை விவரம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், அழைப்புக் கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.