சென்னை: மேல்நிலை எழுத்தர்கள், பன்முக உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதுதொடர்பாக இஎஸ்ஐ நிறுவனத்தின் துணை இயக்குநர் சு.கருப்பசாமி (நிர்வாகம், மக்கள் தொடர்பு) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் துறையின் தமிழ்நாடு மண்டலத்தில் 202 மேல்நிலை எழுத்தர்கள், 193 பன்முக உதவியாளர்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின், தமிழ்நாடு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மருத்துவமனையிலும் செவிலியர், மருந்தாளுநர், அறுவை சிகிச்சை மைய உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் இணையவழி மூலமாக மட்டுமே வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு www.esichennai.org www.esic.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.