சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் படிப்புகள் பயில சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) நேற்று வெளியிடப்பட்டது.
மொத்தம் 1,070 இடங்கள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2015-16ஆம் ஆண்டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை படிப்பில் 1,000 இடங்களிலும், தோட்டக்கலை படிப்பில் 70 இடங்களிலும் மாணவ, மாணவிகள் தனி கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்படவுள்ளனர்.

11,053 விண்ணப்பங்கள் வரவு
இதற்காக கடந்த மாதம் முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் படிப்பில் சேர்வதற்கு 11,053 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு வந்தன.
இதைத் தொடர்ந்து பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒப்புகைச் சீட்டு தபால் மூலம் அனுப்பப்பட்டது.
சமவாய்ப்பு எண்
இந்நிலையில், பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை (ரேண்டம் எண்) துணைவேந்தர் செ.மணியன் நேற்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பதிவாளர் கே.ஆறுமுகம், சேர்க்கை பிரிவு ஆலோசகர் தி.ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விரைவுத் தபால் மூலம் கடிதம்
இதுகுறித்து துணைவேந்தர் செ.மணியன் கூறியதாவது: தகுதியுள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதம், விரைவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்படும்.
சேர்க்கைப் பட்டியல்
தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்களின் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும்.
கவுன்சிலிங்
அனுமதிச் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படுவர். கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இணையதளம் மூலம்...
மேலும் பல்கலைக்கழக இணையதளத்தில் www.annamalaiuniversity.ac.in மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், பல்கலைக்கழக மைய தொலைபேசி எண்கள் 04144-238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம் என்றார் துணைவேந்தர் செ.மணியன்.


Click it and Unblock the Notifications












