சென்னை: உயர் கல்வி நிறுவனமான ஐஐடி கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் ராஜஸ்தானைச் சேர்ந்த 1,965 மாணவர்கள் ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
நமது நாட்டிலுள்ள முக்கியக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி-யில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ, மாணவிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கான நுழைவுத் தேர்வுகளில் எழுதி வெற்றி பெறுவதற்காக 8-ம் வகுப்பு முதலே மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு சேர்க்கைக்குப் பின்னர் அதிக அளவில் ராஜஸ்தான் மாநில மாணவர்கள் சேர்ந்துள்ளளதாகத் தெரியவந்துள்ளது.
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வு நிறைவு பெற்ற பின்னர், அதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது:
நடப்பாண்டு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐ.ஐ.டி.களில் மொத்தமுள்ள 9,974 இடங்களில் 1,965 இடங்களை ராஜஸ்தான் மாநில மாணவர்கள் பிடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநில மாணவர்கள் 1,259 இடங்களைப் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு முதலிடத்தைக் கைப்பற்றிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டு 776 இடங்களைப் பிடித்துள்ளனர்.
மேலும் நடப்பாண்டு ஹிந்தி மொழி முலம் கல்வி பயின்ற கிராமப்புறங்களைச் சேர்ந்த 25 சதவீத மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.