சென்னை: புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஇ சேர்க்கைக்கான சென்டாக் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் என்.ரங்கசாமி இதை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சென்டாக் எனப்படும் ஒருங்கிணைந்த சேர்க்கைக் குழு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதைப் போலவே இந்த ஆண்டும் சேர்க்கை சென்டாக் நடத்துகிறது. இதற்கான தரவரிசைப் பட்டியலைத்தான் இப்போது முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.
மருத்துவப் பாடப் பிரிவில் மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த எம்.கே. அனஸ்வரா 200க்கு 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார். தலச்சேரி நெட்டூர் மாணவர் பிராஜ்வால் கிருஷ்ணா 199 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த கே. அம்ருதவர்ஷினி 198.66 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இதேபோல பொறியியல் பாடப்பிரிவில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஆர். ஸ்ரீவத்சன் 199.66 மதிப்பெண்களும், சுப்பையா நகர் என்.பாலாஜி 199.33 மதிப்பெண்களும், தலச்சேரி நெட்டூர் பிராஜ்வால் கிருஷ்ணா 199.33 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 24-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அப்போது அறிவித்தார்.
மேலும் மருத்துவப் பாடப்பிரிவில் 273 இடங்கள் அரசு ஒதுக்கீடாக நடப்பாண்டு பெறப்படவுள்ளது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












