1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவருக்கு தலா ரூ.250, 6-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு தலா ரூ.330-ம், தலா 4 கிலோ அரிசியும் வழங்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி மாநிலத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஊரடங்கின் காரணமாக மாணவர்களுக்குத் தேவையான சத்துணவு வழங்கமுடியாத இக்காலத்தில் அதற்குப் பதிலாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு தலா ரூ.250, 6-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு தலா ரூ.330 மற்றும் 4 கிலோ அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி அரசும் தமிழக அரசின் பாடத் திட்டத்தை பின்பற்றி வருகிறது. எனவே இந்த நிகழ்ச்சி வாயிலாக நமது மாணவர்களும் பயனடைவர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கேபிள் டி.வி. நிறுவனத்திறனர் தமிழக அரசு ஒளிபரப்பும் கல்வி நிகழ்ச்சிகளை இங்கேயும் ஒளிபரப்ப வேண்டும். அதோடு, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பாகவும் காணொலி வாயிலாக நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
2020-2021 கல்வி ஆண்டில் நீட் தவித்து பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள், இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் திங்கட் கிழமை முதல் (இன்று) ஆன்லைன் முறையில் சென்டாக் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.