புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 526 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in., www.dge.tn.gov.in. என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்தன. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.
புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது. புதுச்சேரியில் 11 ஆயிரத்து 856 பேரும், காரைக்காலில் 2 ஆயிரத்து 152 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 8 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடந்தது.

இந்நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in., www.dge.tn.gov.in. என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6,566 மாணவர்களும் 7,446 மாணவிகளும் ஆக மொத்தம் 14,012 பேர் தேர்வை எழுதியிருந்தனர்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 12,948 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 5,867 மாணவர்களும் 7,081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 92.41 சதவீதம் பேர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்..
இந்தத் தேர்ச்சி முடிவுகளில் புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 526 மாணவர்கள் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இயற்பியல் பாடத்தில் 9 பேரும், வேதியியல் பாடத்தில் 3 பேரும், உயிரியல் பாடத்தில் 4 பேரும், கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 165 பேரும், கணிதம் பாடத்தில் 20 பேரும், விலங்கியல் பாடத்தில் ஒருவரும், பொருளியல் பாடத்தில் 22 பேரும், வணிகவியல் பாடத்தில் 81 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 15 பேரும், வணிக கணிதம் பாடத்தில் ஒருவரும், கணிப்பொறி பயன்பாடு பாடத்தில் 69 பேரும், மனையியல் பாடத்தில் ஒருவரும், பிரெஞ்சு பாடத்தில் 135 பேரும்என மொத்தம் 526 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் சாதித்துள்ளனர்.
இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் கணிப்பொறி அறிவியல் 9, கணிதம் 1, பொருளியல் 1, வணிகவியல் 3, கணிப்பொறி பயன்பாடு 3, மனையியல் 1, பிரெஞ்சு 2 என மொத்தம் 20 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தங்களது சாதனையை இங்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












