தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை அமலில் இருந்துவருகிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் கல்வியின் தரம் மேம்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
தற்போது, இந்த நடைமுறையினை மாற்றும் வகையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று (செப்., 13) தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியதாவது,
தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம். தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.