தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதுகுறித்தான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற முறை அமலில் இருந்துவருகிறது. இதனால் மாணவர்கள் மத்தியில் கல்வியின் தரம் மேம்படாமல் இருப்பதாகக் கூறி இந்த நடைமுறையினை மாற்றும் வகையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வினை நடத்த மத்திய அரசு முடிவு செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளியன்று (செப்., 13) தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பானது பள்ளி சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும், இந்த மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார், அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்பது வதந்தி என்றும் அரசின் சார்பில் அதுபோன்ற முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












