சென்னை : கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.சம்பத்குமார், இவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பிளஸ்2 தேர்வில் 95.75 சதவீத மதிப்பெண் பெற்றேன். பிளஸ்2 மதிப்பெண் மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மும்பையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க கடந்த ஆண்டு இடம் கிடைத்தது.
கல்விக்கடன்
இதைத் தொடர்ந்து எனது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலங்களை ஈடாக வைத்து ரூ. 25 லட்சம் கல்விக்கடன் வழங்கும்படி விழுப்புரம் மாவட்டம் முகையூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விண்ணப்பித்தேன்.
விவசாய நிலங்கள்
விவசாய நிலைங்களை ஈடாக பெற்றுக் கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்று கூறி கடந்த 24.06.2016 அன்று எனது விண்ணப்பத்தை நிராகரித்து வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும் என தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.
ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவை
இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா விசாரித்தார். பொருளாதார தரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள மாணவர்கள் உயர்கல்வியை தடையின்றி தொடர வேண்டும் என்பதற்காக கல்விக்கடன் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த மனுதாரர் தனது முயற்சியால் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். விவசாய நிலங்களை ஈடாக பெற்றுக் கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் ஒருபோதும் மறுக்க முடியாது. கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருதி வங்கி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.
நீதிபதி உத்தரவு
விவசாய நிலங்களை ஈடாக பெற்றுக் கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்ற வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரிடம் இருந்து விவசாய நிலங்களுக்கான ஆவணங்களை பெற்றுக் கொண்டு அவர் கோரிய ரூ. 25 லட்சம் கல்விக்கடனை 4 வாரத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.