சென்னை : இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மெட்ரிகுலேசன் மற்றும் தனியார் பள்ளியில் சேர விரும்புபவர்கள் இணையதளம் வழியாக நாளை முதல் மே 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரிக்குலேசன் மற்றும் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவருக்கான 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் நாளை முதல் (ஏப்ரல் 20) மே 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் பலகை ஒவ்வொரு பள்ளியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது அந்த பள்ளியில் சேரும் வகுப்பில் ஏழை எளியவர்கள், நலிவடைந்தவர்கள், மறுக்கப்பட்டவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள் ஆகியோர் 25 சதவீதம் இலவசமாக சேர்க்கப்படுவார்கள். சேர்க்கைக்கு பிறப்புச் சான்றிதழ், குடும்பஅட்டை, வருமானவரிச்சான்றிதல், ஜாதிச் சான்றிதழ் ஆகியவைகள் தேவைப்படுகின்றன.
இலவச சேர்க்கை
இலவச சேர்க்கை மூலம் மாணவ மாணவியர்கள் எல்கேஜி, 1ம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள். சில பள்ளிகளில் எல்கேஜியில் இருந்து சேர்க்கை நடைபெறும். சில பள்ளிகள் 1ம் வகுப்பில் இருந்துதான் செயல்படும் அந்த பள்ளிகளில் 1ம் வகுப்பில் சேர்க்கை நடைபெறும். சில பள்ளிகள் பிரைமரி வகுப்புக்கள் இல்லாமல் ஆறாம் வகுப்பில் இருந்து தான் செயல்படும் அந்த பள்ளிகளில் 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை இருக்கும்.
9 ஆயிரம் பள்ளிகள்
2017-2018-ம் கல்வியாண்டிற்கு மாநிலம் முழுவதும் உள்ள 9 ஆயிரம் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) உள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்களுக்கு நலிவடைந்தவர்கள் மறுக்கப்பட்டவர்கள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள் ஆகியோர் 25 சதவீதம் இலவசமாக சேர்க்கப்படுவார்கள்.
10 ஆயிரம் இ-சேவை மையங்கள்
நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவித் தொடக்க கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குறுஞ்செய்தி அனுப்பப்படும்
அரசு இ-சேவை மையங்களைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி அவர்களது கைப்பேசிக்கு அனுப்பப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள மூலம் விண்ண்ப்பிக்கவும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பம்
விண்ண்ப்பதாரர்கள் எல்கேஜி மற்றும் 1ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் போது தங்கள் வீட்டின் அருகில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கவும், 6ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் போது தங்கள் வீட்டின் அருகில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கள் உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கவும். அல்லது வீட்டின் அருகில் எந்த பள்ளி உள்ளதோ அதற்கு விண்ணப்பிக்கவும். மேலும் ஒரு குடும்பத்தில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காகவும் விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கு மேற்ப்பட்ட பள்ளிகளுக்கும் விண்ணப்பிக்க இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குலுக்கல் முறை
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்யப்படும். அந்தந்த பள்ளியில் மே 23ம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கைக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறையினர் முன்னிலையில் குலுக்கல் வெளிப்படையாக நடத்தப்படும்.
நேரடி சேர்க்கை
மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் முறை கிடையாது. அவர்களுக்கு முதலிலேயே முன்னுரிமை கொடுக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications












