சென்னை: கோவையில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
கோவையில் தமிழக அரசின் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது. தனியார் துறையினர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10,155 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினர்.
தமிழக அரசு ஏற்பாடு
தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பதிவு ஆகியவை நேற்று நடைபெற்றது.
டிவிஎஸ், ஏபிடி...
டி.வி.எஸ்., ஏ.பி.டி., கொடிசியா, இன்போசிஸ், எல்.எம்.டபிள்யூ, பிரிக்கால் உள்ளிட்ட 460-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்றன.
மும்பை, பெங்களூரு....
மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், ஓசூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறுவனங்கள் பங்கேற்றன.
ஒரு லட்சம் பேர்....
இதில் 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம், பட்டம், ஐ.டி.ஐ., பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு திரண்டனர். இதனால் மைதானமே கோலாகலமாக காட்சியளித்தது.
10,155 பேர்
இம்முகாமில் பங்கேற்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரில் 14 மாற்றுத் திறனாளிகள் உள்பட 10,155 பேருக்கு வேலை கிடைத்தது.
25 ஆயிரம் பேர் பயன்
மேலும், 14,503 பேர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பதிவு, 938 பேர் வெளிநாட்டுப் பணி வேண்டி பதிவு என மொத்தம் 25,596 பேர் பயனடைந்தனர். இதனால் இது இளைஞர்களுக்கு நல்ல முகாமாக அமைந்தது.
அமைச்சர் மோகன்
நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு பணி உத்தரவுக்கான ஆணைகளை வழங்கினார்.
83 லட்சம் பேர் காத்திருப்பு
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 83 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பற்றோர் என கருத முடியாது. இவர்களில் 61 லட்சம் பேர் கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிப் படிப்பு முடித்து பதிவு செய்தவர்கள் ஆவர். இதில் பலர் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
ரூ. 31 கோடி மதிப்பில்...
தற்போது 13 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு ரூ.31 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வோர் அலுவலகத்திலும் தனியார் துறை பணியமர்த்தல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் நான்கு ஆண்டுகளில் 1,22,931 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார் அவர்.
அமைச்சர் தங்கமணி
நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எம்.பி.க்கள்
இந்த நிகழ்ச்சியில் கோவை மேயர் ப.ராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், சி.மகேந்திரன், ஏ.பி.நாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செ.தாமோதரன், த.மலரவன், சின்னசாமி, ஓ.கே.சின்னராஜ், சேலஞ்சர் துரை, வி.சி.ஆறுக்குட்டி, முத்துகருப்பண்ணசாமி, கருப்புசாமி, எம்.ஆறுமுகம், காவல் துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.