புதிய தேசியக் கல்வி கொள்கையின் திட்டங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், கல்வி அமைச்சகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்குக் கடந்த ஆண்டு முதல் பல்வேறு மாநிலங்களும் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், திடீரென பிரதமர் மோடி தலைமையிலான அமர்வு, இந்தக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
குறிப்பாக, பொது மக்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், எவ்வித கருத்துக் கேட்பும் நடத்தாமல் இதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என தற்போது, அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், அரசிதழிலும் பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மத்திய கல்வித்துறை அமைச்சராக ரமேஷ் பொக்ரியால் செயல்படுவார் என்றும், கல்வித்துறை இணை அமைச்சராக சஞ்சய் தோத்ரே செயல்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.