கொரோனா பேரிடர் காலம் முடிந்து தற்போது மாணவர்களின் கற்றல் திறனை அறிய நடைபெறவிருந்த ஆன்லைன் தேர்வு சர்வர் பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றினைக் கட்டப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆன்லைன் வழியில் வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் தற்போதைய கற்றல் திறனை அறியும் வகையிலும், ஆன்லைன் மூலமாக படித்து வரும் மாணவர்கள் கற்றல் திறனை அறிந்து அவர்களுக்கு அடுத்தகட்ட பாடங்களை நடத்தவும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்கான தேர்வுகள் ஜனவரி 22 ஆம் தேதி முதல் 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
இன்று இத்தேர்வு நடைபெறவிருந்த நிலையில் அதற்கான சர்வர் சரியில்லாத காரணத்தால் மாணவர்கள் பலர் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிகள் அறிவித்துள்ளன.
மறு உத்தரவு வரும் வரை இந்த தேர்வுகளை ஒத்திவைக்க அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.