சென்னை: வறுமையின் காரணமாக எம்பிபிஎஸ் இடம் கிடைத்தும் அதில் சேர முடியாமல் தவித்து வருகிறார் ஏழை மாணவர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், வறுமை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.

கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்(49), கூலித் தொழிலாளியான இவரது மகன் சுந்தர், இவர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அங்குள்ள தொடக்கப் பள்ளியில் பயின்றார். திறனாய்வுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
இதையடுத்து, சுந்தருக்கு இலவசக் கல்வி வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மணிவிழுந்தான் மாருதி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சுந்தர், பத்தாம் வகுப்புத் தேர்வில் 486 மதிப்பெண்களைக் குவித்து அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்.
இப்போது பிளஸ் 2 தேர்வில் 1,160 மதிப்பெண்கள் பெற்று சுந்தர் பள்ளியிலேயே முதலிடத்தைப் பிடித்தார். இவரது மருத்துவப் படிப்புக்கான கட்-ஆஃப் 193. இவருக்கு விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாத நிலையில் தவித்து வருகிறார்.
தனக்கு யாராவது நிதியுதவி அளித்தால், மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயில முடியும் என்று சுந்தர் தெரிவித்தார்.
தொடர்புக்கு, செல்லிடப்பேசி எண்: 90475 33843. ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்யவேண்டும் என்ற நோக்கில்தான் தான் மருத்துவம் பயில விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார் சுந்தர்.


Click it and Unblock the Notifications












