கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில் புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.
தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் தற்போது திறக்க முடியாத சூழல் நிலவி வருவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் பள்ளிகளில் நடைபெறவிருந்த இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முதலில் ரத்து செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்து அறிவித்துள்ளன. இருப்பினும், கல்லூரிகளை பொறுத்தவரையில் பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளை கல்லூரிகள் திறந்த பின்னர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கை வருகிற 30ஆம் தேதி வரை நீட்டித்த மத்திய அரசு, கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் ஜூலை மாதத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தது.
இருப்பினும், கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்முறைத் தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, புதுச்சேரி பல்கலைக்கழக முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இறுதியாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications












