கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என அமைச்சர் அறிவித்துள்ளார்.
பள்ளிகளைத் திறக்க முடிவு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அண்மையில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் நடத்த ஜூலை 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளையும் நடத்த தயார் செய்யப்பட்டது.
இரண்டாம் அலை
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், அதற்கான நடைமுறைகளை கல்வித்துறை மூலம் கலந்து ஆலோசித்து வெளியிடுவோம் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார்.
முழுவீச்சில் தயாரான பள்ளிகள்
முதலமைச்சரின் அறிவிப்பின்படி, நாளை பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், அனைத்துப் பள்ளிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அதேபோல் கல்லூரிகளிலும் பணிகள் நடக்கத் தொடங்கப்பட்டுள்ளது.
திடீர் அறிவிப்பு
அமைச்சர்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து, மாணவர்களின் வருகைக்காக பள்ளி, கல்லூரிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று பள்ளிகள் தயாராக இருந்தன. இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று திடீரென அறிவித்துள்ளார்.
ஆலோசனை நடத்தினோம்
இதுகுறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறப்பது குறித்து தொடர்பாக மருத்துவர், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவுவது குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பள்ளிகள் திறக்கப்படாது
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில், பள்ளி திறப்பை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற விவரம் பின்னர் வெளியிடப்படும். இப்போதைக்கு பள்ளி, கல்லூரி திறக்கப்படாது என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
ஆன்லைன் வழியில் தேர்வு
தொடர்ந்து, கடந்த காலங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டதைத் போலவே அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியில் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு விமர்சனங்கள்
அரசின் இந்த திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் புதுச்சேரி ஆளும் அரசு தெளிவான முடிவுகளை எடுக்காமல் இருப்பது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.