பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன், திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இன்று சுற்றுப்பயணம் செல்ல தேர்வாகியுள்ளார்.

வருடந்தோறும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச அளவில் விண்வெளி வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேசன் - ஓ.எஸ்.எப் என்னும் தனியார் அமைப்பு சார்பில், விண்வெளி திறனறிதல் தலைப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. அதில், கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவற்றில், சூரியக் குடும்பம் என்றால் என்ன, நிலாவில் எப்படி வீடு கட்டுவீர்கள், பூமியின் வடிவம் என்ன ? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம்பெற்றிருந்தது. இதில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், சின்னாறு பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், ஐந்தாம் வகுப்பு பயிலும் ஆழியாறு கிராமத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரி ராஜேந்திரன் என்பவரது மகன் திவாகர் தேர்வாகியுள்ளார். கிராமப் பள்ளியில் படித்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட தேர்வாகியுள்ள மாணவன் திவாகரை பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டியுள்ளார்.
இந்தச் சுற்றுப் பயணத்தின் போது விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில் செயல்பாடு மற்றும் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்படும் ஏவுகணை உள்ளிட்டவை உள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட செல்கிறார் என்றார் தலைமை ஆசிரியர்.
இதுகுறித்து மாணவன் திவாகர் கூறுகையில், விண்வெளி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். புத்தகத்தில் உள்ளதையும், ஆசிரியர் கற்றுக்கொடுப்பதையும் வைத்து விண்வெளியில் உள்ள கோல்கள் குறித்துக் கற்றுக்கொண்டேன். விண்வெளிக்குச் செல்ல வேண்டும், நிலாவைத் தொட வேண்டும் என்பது எனது வாழ்நாள் ஆசை என கூறி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளார் அம்மாணவர்.


Click it and Unblock the Notifications












