சென்னை: காவல் உதவி ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்) பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இணையதளத்தில் வெளியிட்டது.
சீருடை பணியாளர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள 1,078 உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.
20 சதவீதப் பணியிடங்கள்
இதில், 20 சதவீதம் பணியிடங்களில் அத்துறையைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்தது.
1.65 லட்சம் பேர் விண்ணப்பம்
இதையடுத்து இந்தத் தேர்வை எழுத 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வின் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வும், பின்னர் உடல் தகுதித் தேர்வும், அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
114 மையம்
இதில் பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். இதேபோல காவல்துறை ஒதுக்கீட்டுதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு அதே மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது.
இணையதளத்தில்...
இந்தத் தேர்வுகளின் முடிவுகளை தேர்வு வாரியம் www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் நேற்று வாரியம் வெளியிட்டது. தேர்வு முடிவை விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், பாஸ்வேர்டை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
அழைப்புக் கடிதம்
மேலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வுக்கான அழைப்புக் கடித்ததை அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உடல் தகுதித் தேர்வு
உடல் தகுதித் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல் திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
11 நகரங்களில்....
இந்தத் தேர்வு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 11 நகரங்களில் நடைபெறவுள்ளன.