ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-ன் (Hackathon 2020) இறுதிச் சுற்று நிகழ்ச்சி இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி, கோவை மாவட்ட பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பைப் பாராட்டி, வாழ்த்து கூறினார்.
நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நாடு தழுவிய ஒரு நிகழ்ச்சியே ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான். இதன் மூலம், புதுமையான பொருட்கள் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பத்தின் மூலம் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வழிவகை செய்யப்படுகிறது.
குறிப்பாக, இளைஞர்களின் மனதில் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகிறது. குடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டியில், ஹேக்கத்தான் 2020-ன் முதல் சுற்றில், 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மென்பொருள் பிரிவினருக்கான மாபெரும் இறுதிப்போட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டியாளர்களும் ஆன்லைன் வாயிலாக பங்கேற்கும் வகையில், அதற்கென உருவாக்கப்பட்ட அதிநவீன சிறப்பு அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ஹேக்கத்தான் 2020 நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் கோவையைச் சேர்ந்த மாணவிக்கு தமிழில் வணக்கம் சொல்லி உரையாற்றத் தொடங்கிய பிரதமர் மோடி, மாணவர்கள் தற்போதைய கண்டுபிடிப்பு குணங்களைப் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, காவல் நிலையங்களுக்கு உதவிடும் வகையில் Artificial Intelligence எனும் செயலிகளை வடிவமைத்த கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.