சென்னை: பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை ஆகஸ்ட் 17 முதல் அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வை 68,941 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். இதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த 424 பேருக்கான முடிவுகள் scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.
ஆகஸ்ட் 17-ம் தேதி காலை 11 மணி முதல் இந்த முடிவுகளை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.
மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் 75 பேரின் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் மதிப்பெண்ணில் மாற்றமில்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ளவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.