சென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்வித்தாள் குழப்பம் ஏற்படுத்தியதால் மாணவர்கள் விடை எழுத திணறினர். இதையடுத்து இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் செண்டம் எடுப்பவர்கள் அளவு குறையும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் நேற்று நடந்த வேதியியல் பாடத் தேர்வு கேள்வித்தாள் மிகவும் குழப்பமாக இருந்துள்ளது. கேள்விகளை படித்துப் பார்த்த மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மாணர்வகள் பார்த்து எழுதுவதை தடுக்கும் நோக்கில் கேள்வித்தாள் ஏ, பி என இரண்டு பிரிவுகளாக அச்சிட்டு வழங்கப்பட்டது.
ஏ வகை கேள்வித்தாளில் 10 மற்றும் 22ம் கேள்விகள், பி வகை கேள்வித்தாளில் 2, 19 ஆகிய கேள்விகளுக்கு சரியான விடையை தேர்வு செய்யும் ஆப்ஷன் வழங்கவில்லை. ஒரு மதிப்பெண் கேள்வியில் சுமார் 23 கேள்விகள் பாடப்புத்தகத்தில் பாடத்தின் இறுதியில் இடம் பெறும் பகுதியில் இருந்து கேட்கவேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு அந்த முறையின் கீழ் 17 கேள்விகள்தான் இடம் பெற்றன. 3 மதிப்பெண் கேள்விப்பகுதியில் வழக்கமாக கேள்கப்படும் கேள்விகள் இடம் பெறவில்லை. மாற்றி கேட்டுள்ளனர். 5 மதிப் பெண் கேள்விப் பகுதியில் கேட்கப்பட்ட 63வது கேள்விக்கு விரிவாக விடை எழுத வேண்டும். அதனால் மாணவர்கள் அந்த கேள்விக்கு விடை எழுத திணறினர்.
இது தவிர பெரும்பாலான கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டுள்ளதால் சரியான விடையை தேர்வு செய்வதில் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு செண்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையும் என்று கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.