சென்னை: அனைவரும் எதிர்பார்த்து வந்த பிளஸ்2 மாணவ, மாணவிகளின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகிறதாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது. இதையடுத்து விடைத்தாள்களை பதிவிறக்கும் செய்த மாணவர்கள் பலர் மறுமதிப்பீட்டுக்கும், மறு கூட்டலுக்கும் விண்ணப்பித்து விட்டனர். கடந்த 1-ம் தேதியுடன் இதற்கான கெடு முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் மாணவர்களின் மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண்ணைத் தொகுக்கும் பணி முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதாம். திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் தேர்வுத் துறையின் இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் திருத்தியமைக்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி., மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை(ஜூன் 12) மாலை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் விவரங்கள் அரசின் "நிக்' மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவர்களுக்கான தாற்காலிக புதிய மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இப்போது வெளியிடப்பட உள்ள மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் மாணவர் பட்டியலில், தங்களது பதிவு எண் இல்லாவிட்டால் மாணவர்கள் சந்தேகம் அடையத் தேவையில்லை. அவர்களுக்கு உரிய பாடத்துக்குரிய விடைத்தாளில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என மாணவர்கள் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள், அறிவிக்கப்படும் நாளில் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களுக்குச் சென்று, தங்களது பழைய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மதிப்பெண்ணில் மாற்றம் இருக்கும்போது அவர்களது தரவரிசையிலும் முன்னேற்றம் ஏற்படும். இதனால் அவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்ய முடியும். இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் மறுகூட்டல், மறுமதிப்பீட்டு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












