தற்போது வெளியாகி உள்ள ப்ளஸ் 2 தேர்வில் 1,907 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதில் விருதுநகர் - 97சதவிகிதம் (முதலிடம்), ஈரோடு- 96.3 சதவிகிதம் (இரண்டாமிடம்) திருப்பூர்-96.1 சதவிகிதத்துடன் (மூன்றாமிடம்) இடத்தை பிடித்துள்ளன. இதனிடையே, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மறுகூட்டல், மறுதேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:
வரும் 21 ஆம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ, www.tnresults.nic.in என்ற இணையதளத்திலோ தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மறுகூட்டல்:
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக வரும் 17-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 19-ஆம் தேதி சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல் தேவையா, விடைத்தாள் நகல் தேவையா என்பதை முன்பே தெளிவாக முடிவு செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் கட்டணம்:
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க
இயலும். விடைத்தாள் நகல் பெற மொழிப்பாடத்துக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறு கூட்டல் கட்டணம்:
மறு கூட்டலுக்கு தலா இரு தாள்கள் கொண்ட பாடங்களான மொழிப்பாடங்கள், மற்றும் உயிரியல் பாடங்களுக்கு 305 ரூபாயும், ஒரு தாள்கள் மட்டுமே கொண்ட பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை:
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
இணையதளத்தில் நகல் பெற அதற்கான ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாத அல்லது வருகை தராத மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் 25 ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.