சென்னை: பிளஸ் 2 கணக்கு கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 18ம் தேதி நடந்தபோது ஓசூர் தேர்வு மையம் ஒன்றில் தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாளை படம் பிடித்து தன்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் என்பவர் ஆசிரியர்கள் படம் பிடித்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து மேற்கண்ட நான்கு ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இது தவிர அந்த மாவட்டத்தை சேர்ந்த 5 கல்வி அதிகாரிகளையும் தேர்வுத்துறை இயக்குநர் சஸ்பெண்டு செய்தார்.
வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் பலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் சஞ்சீவ், மைக்கேல் ராஜ், விமல்ராஜ், கவிதா ஆகியோரிடம் கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தினர். வாட்ஸ் ஆப் மூலம் எடுக்கப்பட்ட கேள்வித்தாள் இவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணைக்குப் பிறகு மேலும் சில கல்வி அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.