சென்னை: பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், கலை அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வியில் சேர விண்ணப்பிப்பதற்கு, மாணவ, மாணவிகள் நிரந்தர சான்றிதழ் வரும் வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. இதை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்தார்.
அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக சான்றிதழ் இன்று முதல் பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட இருக்கிறது. எனவே மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சான்றிதழ் 90 நாட்களுக்கு மதிப்புள்ளதாக கருதப்படும். இன்னும் சில நாட்களில் இந்த தற்காலிக சான்றிதழ் அரசு தேர்வு துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது.