சென்னை : இன்று வெளியாகவிருக்கும் பிளஸ்2 தேர்வு முடிவுகளில் பல அதிரடி மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கிட்டத்தட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தேர்வினை எழுதியுள்ளார்கள்.
கடந்த மார்ச் மாதம் 2ந் தேதி தொடங்கி மார்ச் 31ந் தேதி தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான முடிவு ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போல இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்படும்.
மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வமாக தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு டி.பி.ஐ வளாகத்தில் வெளியிடப்படும். இதனை கீழ் உள்ள இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
மேலே உள்ள இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி ரேங்க் முறை கிடையாது. 1,2,3 ஆகிய இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை.
மாநில அளவில் ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட போவதில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளியில் பயின்று சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழ்வழியில் கல்வி பயின்று சிறந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர்கள் தேர்வு முடிவுகளை நல்ல மனப்பக்குவத்துடன் எதிர்கொள்ளுங்கள். தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்கு தமிழக அரசு 104 என்ற சிறப்பு எண்ணை ஏற்பாடு செய்துள்ளது. அவர்களுக்காக சிறப்புத் தேர்வும் ஜூன் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.