சென்னை : தமிழகத்தில் இன்று பிளஸ்2 முடிவுகள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
இந்த வருடம் கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 1813 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. 292 அரசுப் பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வமாக தேர்வு முடிவுகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு டி.பி.ஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. இதனை கீழ் உள்ள இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in
என்ஜீனியரிங் மற்றும் மருத்துவப் படிப்பிற்கு தேவையான பாடங்களான வேதியியல் பாடத்தில் 1123 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 187 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 221 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 22 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் 4 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3656 பேர் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 92.8 சதவீதம், மதுரை மாவட்டத்தில் 93.6 சதவீதம், தூத்துக்குடி மாவட்டத்தில் 96.4 சதவீதம், சிவகங்கை மாவட்டத்தில் 96.18 சதவீதம், கோவை மாவட்டத்தில் 95.83 சதவீதம், விருது நகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம், தேனி மாவட்டத்தில் 95.93 சதவீதம், வேலூர் மாவட்டத்தில் 84 சதவீதம் மாணவ மாணவியர்கள் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மொத்தம் 86.87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டம் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1180க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஏ கிரேடும், 1151 முதல் 1180 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பி கிரேடும், 1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடும், 1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு டி கிரேடும், 1001 முதல் 1100 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இ கிரேடும் வழங்கப்பட்டுள்ளது.