சென்னை: பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
அந்த மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உடனடியாக சிறப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்தத் தேர்வு ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியிடப்பட்டன. மேலும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜூலை 17 முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கது. இந்தச் சான்றிதழைக் கொண்டு உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாட்டை அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திருந்தது.
இந்த நிலையில், தனித் தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 4 வரை தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.