சென்னை: பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களின் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்தவர்கள் இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘'மார்ச் 2015 மேல்நிலை தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்களில் முதல் பிரிவு பாடங்களுக்கான விடைத்தாள் நகல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு இன்று காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மற்ற பாடங்களுக்கான விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for retotalling, revaluation என்ற தலைப்பினை "கிளிக்" செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்திசெய்து 2 நகல்கள் எடுத்து அடுத்த மாதம் 1 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தினை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு தொடர்பாக தெளிவுபடுத்திக்கொள்ள 8012594109, 8012594119, 8012594124, 8012594126 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்''என்று கூறப்பட்டுள்ளது.