சென்னை : பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. ஆனால் அதில் நீட் தேர்வை சமாளிக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் எதுவும் கொண்டுவரப்பட வில்லை என கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கூட பாடத்திட்டம் 5 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுவது உண்டு. ஆனால் பல வருடங்களாக பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டடங்கள் மாற்றப்பட வில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பிளஸ் -1 மற்றும் பிளஸ் -2 பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு முதல் அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அந்தப் பாடத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
நீட் தேர்வு மசோதா
கடந்த வருடம் மத்திய அரசு அனைத்து மாநில மாணவர்களும் நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் எம்.பி.பி.எஸ் படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியது. ஆனால் கடந்த வருடம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடமும் விதி விலக்கு கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அதுவும் கிடப்பில் உள்ளது.
பாடத்திட்டத்தில் மாற்றம் எப்போது?
நீட் தேர்வு மே மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் மத்திய அரசோ மாநில அரசோ இதுக்குறித்து மாணவர்களுக்கு இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்களின் டாக்டர் கனவு கேள்விக்குறியாக உள்ளது. நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். எனவே தமிழகத்தில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழக மாணவர்களாலும் நீட் தேர்வு போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும்.
டி.பி.ஐ. வளாகம்
சென்னை டி.பி.ஐ வளாகத்தில் உள்ள பாடநூல் விற்பனை நிலையத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால் பிளஸ்-1 பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. மேலும் 11ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகுதான் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்.
தமிழக மாணவர்களின் நிலை?
11ம் வகுப்பு பாடத்திட்டமே அடுத்த (2018-19) கல்வியாண்டில்தான் மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துதறை தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு பாடத்திட்டம் (2019-20) கல்வியாண்டில்தான் மாற்றப்படும் எனத் தெரிய வருகிறது. பாடத்திட்டங்கள் மாற்றப்பட இன்னும் இரண்டு வருடங்களாகும் என்றால் தமிழக மாணவர்களின் நிலை?
என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு
அடுத்த வருடம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடக்கவிருக்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வினை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டங்களில் விரைவில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களை அரசே முன் வந்து ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.