சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையேயான நேரடி கலந்துரையாடல் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன் தலைமையேற்று நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தெரிந்து கொண்டு அவற்றில் என்னென்ன கோரிக்கைகளை அரசால் நிறை வேற்ற முடியுமோ அதுகுறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
இதில் 64 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பள்ளிகளில் யோகா வகுப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் கார்டு அட்டையில், ஆதார் எண், ரத்தப்பிரிவு எண், சாதி என மாணவர்களைப் பற்றிய அத்தனை விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
தமிழக மாணவர்களை நீட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை.
அடுத்த ஆண்டு பாடத்திட்ட மாற்றம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்படும். என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.