தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளும் இணையம் மூலம் இணைக்கப்பட்டு, அவற்றுள் 600க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சியில் கடந்த திங்கட்கிழமை அன்று ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 285 தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் அடுத்து வரும் நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணைய வாயிலாக இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில், 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.