புதுடெல்லி: விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பிஎச்.டி. டிகிரியை படித்து முடித்திருந்தால் அந்தப் படிப்புக் காலத்தை ஆசிரியப் பணி அனுபவமாக கொள்ளவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் பிஎச்.டி. மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த அறிவிப்பை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. யுஜிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிஎச்.டி படிப்புக்காக மாணவர்கள் படிக்கும்போது எந்த விடுமுறையும் எடுத்திருக்கக்கூடாது. அவ்வாறு விடுமுறை எடுக்காமல் பிஎச்.டி. படிப்பை முடிக்கும் மாணவர்கள் அந்த படிப்புக் காலத்தை பணி அனுபவமாக கொள்ளலாம். அவர்கள் நேரடியாக உதவி பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற முடியும். இவ்வாறு அந்த அறிவிப்பில் யுஜிசி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் பிஎச்.டி. மாணவர்கள் உள்பட பேராசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன்மூலம் காலியாகவுள்ள பேராசிரியர்கள் பணியிடங்கள் பல விரைவில் நிரப்பப்பட வாய்ப்புள்ளது என்று பிஎச்.டி. மாணவர்கள் தெரிவித்தனர். தற்போது ஆசிரியப் பணிக்கு 2 அல்லது 3 ஆண்டு அனுபவமுடைய பேராசிரியர்கள் மட்டுமே பணிக்குத் தேவை என பல்கலைக்கழகங்கள் தெரிவிக்கின்றன. யுஜிசியின் புதிய உத்தரவால் பிஎச்.டி. படிப்பை படித்து முடித்தவுடன் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.