சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2017ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை ஏப்ரல் 29ம் மற்றும் 30ம் தேதிகளில் நடத்தவிருப்பதாக கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிக்கப்படும் போதே முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் வழக்கமாக அறிவிக்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வும் விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் மேலும் பட்டதாரிகளிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை கடிதம்
தமிழ்நாட்டில் உள்ள 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைச் சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மூன்று முறைக் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்
பள்ளிக்கல்வித்துறையின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வினை நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட தயாராக இருந்தது. ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை விரைவில் நடத்த வேண்டி நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.
முதுகலை பட்டதாரி எழுத்துத் தேர்வு
தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்துத் தேர்வு மூலம் நியமிக்கப்படுவார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை.
பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்
நடப்பு கல்வியாண்டில் (2017-2018) 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1000 கூடுதல் காலிப் பணியிடங்கள் உருவாகும். அதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பணியிடங்கள்
இந்த கல்வியாண்டில் (2017- 2018) 1500 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பதிலாக புதிய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












