சென்னை : முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான தகுதி பட்டியலை தயாரித்து வெளியிட கால அவகாசம் கோரிய தமிழக அரசின் மனுவை ஜூலை 5ந் தேதிக்கு தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கையின் போது, எம்பிபிஎஸ் முடித்துவிட்டு மலைகிராமங்கள், குக்கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும்.
இதற்காக குக்கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் உள்ளிட்டவைகளை வரையறை செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கிய இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தொடரப்பட்டது
இதன்படி தமிழக அரசு, கிராம பகுதிகளை வரையறை செய்து கடந்த மே மாதம் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் பிரணிதா உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
மேல் முறையீடு
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்டு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், சுரேஷ்குமார் ஆகியோர் கடந்த 16ந் தேதி பிறப்பித்த உத்தரவில், நகர் பகுதிகளில உள்ள அரசு ஆஸ்பத்திரிகளை எல்லாம் குக்கிராமங்கள் என்று தமிழக அரசு வரையறை செய்து அதில் பணியாற்றும் டாக்டர்களுக்கு முதுகலை மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியுது. எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம். புதிய அரசாணையை வெளியிட்டு, அதன் அடிப்படையில் முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
கால அவகாசம்
இந்த நிலையில், தகுதி பட்டியலை தயாரிக்க 2 வார கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ராஜீவ்ஷக்தேர், சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜூலை 5ந் தேதி தள்ளிவைப்பு
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டில் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 4ந் தேதி தான் விசாரணைக்கு வர உள்ளது. எனவே கால அவகாசம் கேட்கும் இந்த மனுவை ஜூலை 5ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 5ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Click it and Unblock the Notifications












