கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையதளம் மற்றும் தொலைக்காட்சியின் மூலம் கல்வியைத் தொடங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, அடுத்த கல்வியாண்டு தொடங்கியும், ஊரடங்கு நீடித்து வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலான வகுப்புகளை நடத்தி வருகின்றன. இருப்பினும் அதுபோன்ற ஆன்லைன் வகுப்பில் போதிய வசதிகளற்ற மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, இணையத்தள சேனல் மற்றும் தொலைக்காட்சி மூலமாகக் கல்வி பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சையது கலேஷா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் தொடுத்திருந்தார்.
அம்மனுவில், பள்ளி மாணவர்கள் தங்களது முழு ஆண்டு தேர்வுகளை எழுதி முடிக்காத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டில் முடங்கி உள்ளதால், அவர்களது கல்வித் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு கொரோனா தொற்றின் ஐயத்தில் இருந்து விடுபட நாள் தோறும் தடையில்லாத கல்வி அவசியம் தேவை. ஏற்கனவே, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 'ஸ்வயம் பிரபா' என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. தொடர்ந்து, மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், ஆன்லைன் கல்வி, மாணவர்கள் கண் பாதிப்பு தொடர்பான வழக்குகளுடன் சேர்த்து, ஜூலை 6-இல் விசாரிப்பதாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.