சென்னை: நெடுங்காலமாக தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிது காரைக்காலில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளி. இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலமாகியும் இதுவரை ஒரு தீர்வு வரவில்லை என்று இங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் புலம்பி வருகின்றனர்.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு இப்படி ஒரு அவல நிலை தேவையா என்று இங்குள்ள கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா, காரைக்காலில் கடந்த 2010-ம் ஆண்டு தற்காலிக கட்டடத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்டது.
பள்ளியின் மேற்கூரை தகர ஷீட்டுகளால் ஆனது. காற்றோட்டமே இல்லாத வகுப்புகளால் மாணழர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் மாணவர்கள் விளையாடிக் களிக்க விளையாட்டு மைதானம் இல்லை.
இந்தப் பள்ளியில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை 450 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே இங்கு இல்லை.பள்ளியைத் திறக்கும்போது இங்கு விரைவில் நிரந்தரக் கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிரந்தரக் கட்டடம் இல்லை. இந்த ஆண்டும் தற்காலிகக் கட்டடத்தில்தான் பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை முடிந்து இன்று(ஜூன்22) பள்ளி திறக்கப்படுகிறது. 5 ஆண்டுகளாக மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் வைக்கப்பட்ட கோரிக்கை இந்த ஆண்டும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
இதனிடையே 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருநள்ளாறு அருகே பூமங்கலம் கிராமத்தில் தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு(சனீஸ்வரர் கோயில்) சொந்தமான நிலத்தில் 7 ஏக்கரை பள்ளிக்கு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதற்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில், அப்பகுதி விவசாயிகள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த இடத்தைப் பெற முடியவில்லை.
இந்த நிலையில் நிரவி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை ரூ. 10 லட்சம் மதிப்பில் சீரமைத்து, அங்கு கேந்திரிய பள்ளிக்கு ஒதுக்க நடவடிக்கை எடுத்தது புதுச்சேரி அரசு.
ஆனால், நிரவி வேறு தொகுதியில் இருப்பதால், திருநள்ளாறிலேயே தாற்காலிக இடம் ஒதுக்க வேண்டுமென திருநள்ளாறு பகுதி அரசியல்வாதிகள் கோரிக்கை எழுப்பினர். இதனால் இந்த பள்ளி பிரச்னைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.
காரைக்காலில் ரூ. 2.5 கோடியில் செவிலியர் பள்ளிக்கான கட்டடம் கட்டப்படுகிறது. ரூ. 2 கோடியில் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்கு கட்டடம் கட்டப்படுகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கென நிலம் ஒதுக்கீடு செய்துள்ள மாநில அரசு, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிலம் ஒதுக்கும் விஷயத்தில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் கூறுகின்றனர்.
இந்த விஷயத்தில் புதுச்சேரி முதல்வர் நேரடியாக தலையிடவேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.