சென்னை: பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வு முடிவுகள் ஜனவரி 1-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இளங்கலை பருவத் தேர்வுகள் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வு முடிவுகள் ஜனவரி 1-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் தேர்வு முடிவுகள் குறுகிய காலத்தில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் வாயிலாக வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வு முடிவுகள் குறுந்தகவலாக அனைத்து மாணவர்களின் செல்லிடப்பேசிக்கும் அனுப்பப்படுகிறது.
மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெறலாம். பின்னர் முதல்வர் வாயிலாகத் தேர்வாணையர் அலுவலகத்துக்கு தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலைப் பெற்ற பின்னர், தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டுக்கு ஏழு நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












