கொரோனா ஊரடங்கின் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு, ஊதியப் பிடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பேடிஎம் பணப் பரிமாற்ற நிறுவனம் சுமார் 300 பேருக்கு வேலை வாய்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக அதிவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப் பரிமாற்ற துறையில் பேடிஎம் சேவையும் ஒன்று. இந்தியாவில் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட வந்த இந்நிறுவனம் தற்போது, பெங்களூருக்கு தனது தலைமை அலுவலகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த திங்களன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், பெங்களூரில் பெருமளவு மக்கள் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை விரும்புவதாலும், பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிமாற்றத்தைப் பெங்களூரு மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதாலும் தொடர்ந்து தனது சேவையை விரிவுபடுத்த இந்த நடிவக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரில் தொடங்கப்படும் பேடிஎம் மால் புது அலுவலகத்தில் சுமார் 300 பேர் பணியில் அமர்த்தப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.